Thursday, July 30, 2015

கலாம் அவர்களின் மறைவும் சில எதிர் வினைகளும்


நம் அன்பிற்கினிய அப்துல் கலாம்...... 

கடந்த 30-35 வருடங்களில் தமிழகத்தில் ஒரு தனி மனிதர் மரணத்துக்கு இவ்வளவு பேர் வருந்தியது எம். ஜி. ஆருக்கு பின் கலாமுக்கு தான் !

காந்தி மற்றும் காமராஜர் வரிசையில் வைத்து போற்றப்பட வேண்டியவர் கலாம்.. நிச்சயமாக காந்தி / காமராஜர் என்று சொன்னால் சராசரி தமிழனுக்கு எவ்வளவு மரியாதை கலந்த உணர்வு வருகிறதோ அதே வித உணர்வுகள் தான் கலாம் என்று சொன்னாலும் என்றென்றும் வரும் ....




கலாமின் அறிவியல் சாதனைகள் ஒரு புறம் என்றால், எந்த பின்புலமும் இன்றி ஜனாதிபதியான சாதனை, பதவியில் இருந்தபோது அவரது நேர்மை, என்றென்றும் ஆசிரியராய் இருந்த எளிமை... இப்படி எத்தனையோ விஷயங்கள் உண்டு...

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்ற கலாம் அவர்களின் கனவு.. அது இளைஞர்களால் மட்டுமே சாத்தியம் என அவர் நம்பினார் ...

அது எப்படி இளைஞர்களால் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றி விட முடியும்?

ஒவ்வொரு இளைஞனும் தன் வாழ்வில் இலக்கை பெரிதாய் நிர்ணயம் செய்து கொண்டு - அதை நோக்கி பயணித்தால் - நிச்சயம் அவன் வளர்ச்சி அடைவான்.. இப்படி ஏராள இளைஞர்கள் வளர்ச்சி - நிச்சயம் இந்தியாவை பொருளாதார ரீதியில் மிக பெரும் அளவில் முன்னேற்றும் என்ற எளிய - சாத்தியமாக கூடிய விஷயத்தை தான் கலாம் அவர்கள் தொடர்ந்து முன் வைத்தார்...



அவரின் அன்பான அணுகுமுறைக்கு மாணவர் மத்தியில் மிக நல்ல வரவேற்பு இருந்தது.

லட்சியம் பெரிதாக இருக்க வேண்டும்; சின்னதான லட்சியம் கொள்வது மிக பெரிய குற்றம் என்று அடிக்கடி சொல்வார்.. உண்மையான விஷயம் இது..

மரணம் எல்லாருக்கும் வருவது தான்... 70 வயதுக்கு மேல் வாழும் எல்லா நாளும் போனஸ் தான். எத்தனையோ முதியவர்கள் மரணம் எப்போது வரும் என்று காத்திருக்க, 70க்கு பின் சட்டென்று வரும் மரணம் போன்றதொரு கொடுப்பினை வாழ்வில் வேறெதுவும் இல்லை... அந்த கொடுப்பினை நமது கலாம் அவர்களுக்கு கிடைக்க பெற்றது..




அரசியல் சார்பின்றி - மாணவர்கள் -இளைஞர்கள் - சமூகத்தை தொடர்ந்து ஊக்கப்படுத்த கலாம் போல இன்னொரு தலைவர் இந்தியாவில் இல்லை.. இது பெரும் வெற்றிடம் தான்..

கலாம் பற்றி சாரு 

கலாம் அவர்கள் பற்றி சாரு கடந்த 4 நாட்களாக கிண்டல் அடித்தோ, குறை சொல்லியோ பதிவுகள் எழுதி வருகிறார்.. 

ஒரு எம். பி தொடர்ந்து சாருவிற்கு போன் செய்து கலாம் பற்றி சொல்வாராம்.. கலாம் பார்க்குபோதேல்லாம் ஒரு திருக்குறள் சொல்லுங்கள் என்று படுத்துவதாகவும், சாருவிடம் திருக்குறள் ஒவ்வொரு முறையும் கேட்டதாகவும் செல்கிறது கதை... 

இதில் ஏதாவது ஒரு பகுதியாவது நம்பும்படி உள்ளதா ?

சாருவிற்கு எந்த  எம். பியாவது  தொடர்ந்து போன் செய்வாரா? சாருவின் இமேஜ் பிரசித்தி பெற்றது. இவரோடு தொடர்பில் இருக்கிறார் என்றாலே "ஒரு மாதிரி" தான் பார்ப்பார்கள்... சர்வ நிச்சயமாய் எந்த எம். பியும் இவருடன் தொடர்ந்து தொலை பேச வாய்ப்பே இல்லை.. 

அடுத்து கலாம் அவர்கள் பார்க்கும் போதெல்லாம் ஒரு திருக்குறள் சொல்லி படுத்தியாக சொல்வது... கலாம் அவர்களை சந்தித்ததாக ஆயிரக்கணக்கனோர் இதுவரை எழுதியுள்ளனர். இந்த குற்ற சாட்டை எவரும் சொன்னதில்லை.. 

இறந்த பின் ஒருவர் பற்றி தவறாக எழுதுவதை இதனால் தான் தவிர்க்க வேண்டும்.. வந்து பதில் சொல்ல அவர் இருக்கா மாட்டார் இல்லையா? எவராலும் அவர் கவனத்துக்கு எடுத்து செல்ல முடியாது அல்லவா? 

அதிலும் தினம் ஒரு திருக்குறள் சொல்ல சாரு தான் சரியான ஆளா? அவரிடம் தினம் ஒரு பலான மேட்டர் கேட்டார் என்று சொன்னால் நம்பலாம்.. திருக்குறளுக்கும் சாருவுக்கும் என்ன சம்பந்தம் ??

மறைந்த ஒரு மாபெரும் தலைவர் பற்றி இப்படி அவதூறாக எழுதுவ து என்ன விதமான மனநிலை? நீங்கள் கலாமை ஒரு தலைவர் என்றோ அவர் வாழ்ந்த வாழ்க்கை அற்புதம் என்றோ சொல்ல வேண்டாம், எத்தனையோ பேரின் உணர்வுகளை காயப்படுத்தாமல் குறைந்த பட்சம் அமைதி காக்கலாம்.. இந்த அடிப்படை நாகரீகம் கூட இல்லாதவர்களை - மனிதர்கள் என்ற வகையிலேயே சேர்க்க முடியாது ! 

Friday, July 24, 2015

வானவில்- புறம்போக்கு- ப்ரியா பவானி ஷங்கர்- CSK

பார்த்த படம் - புறம்போக்கு

விஜய் சேதுபதி, ஆர்யா, ஷாம் நடித்த புறம்போக்கு தாமதமாக தான் காண முடிந்தது. நிச்சயம் ஒரு மிக வித்யாசமான படம். இப்படி பட்ட படங்கள் ஓடாமல் போவது வருத்த பட வேண்டிய விஷயமே !!

இயக்குனர் ஜன நாதன் - தனது அனைத்து படங்களிலும் கம்மியூனிச தத்துவத்தை அடிநாதமாக வைப்பார் ; அது இங்கும் தொடர்கிறது. இருப்பினும் தூக்கு தண்டனை கைதி ஒருவன் - தூக்கில் இடப்படுவதை இவ்வளவு விரிவாக ஒரு தமிழ் படம் அலசிய நினைவில்லை..

விஜய் சேதுபதி, ஷாம் இருவரும் அட்டகாசமாக நடித்துள்ளனர். ஆர்யாவை தீவிர வாதியாக ஏற்க தான் சற்று கடினமாய் உள்ளது. பாடல்கள் ஸ்பீட் ப்ரேக் போடுகிறது...

இரண்டாம் பாதி விறுவிறுப்புடன் சென்று மனதை கனக்க வைத்து முடிகிறது..

சிற்சில குறைகள், lag இருந்தாலும் - வித்தியாச முயற்சி மற்றும் கதை களனுக்காக - அவற்றை பெரிது படுத்த வேண்டாம்..

இதுவரை பார்க்கா விடில் அவசியம் ஒருமுறை பாருங்கள்...

போஸ்டர் கார்னர்



தடுமாறும் தங்கம்

தங்கம் விலை தாறுமாறாக குறைந்து கொண்டிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் மிக குறைந்த விலை இப்போது ! இதில் முக்கிய விஷயம் - கடந்த 4 ஆண்டுகளில் தான் தங்கத்தின் விலை மிக மிக அதிகம் உயர்ந்தது !!

கம்பனி ஷேர்களிலும் சரி, தங்கத்திலும் சரி - மிக சரியான நேரம் (Ideal time ) என பார்த்து வாங்க முடியாது. ஓரளவு குறைந்துள்ளது என்ற அடிப்படையில் வாங்க வேண்டியது தான் !

அல்லது இன்னும் சற்று பொறுத்திருந்து மீண்டும் ஏற துவங்கும் நேரத்திலும் தாமதிக்காமல் உடனே வாங்கலாம் !

தனிப்பட்ட முறையில் - என்னை கேட்டால் - நிச்சயம் தங்கம் வாங்க இது நல்ல நேரம் என்பேன்... ஒருவேளை விலை இன்னும் குறைந்தால், அப்போது இன்னும் கொஞ்சேமேனும் வாங்கி ஆறுதல் அடைந்து கொள்ளலாம் :)

டிவி கார்னர் : சார்.... ப்ரியா .. சார் !!!!

தமிழ் சானல்களில் அதிகம் பார்ப்பது - விஜய் டிவி  தான். இனி விஜய் டிவியை பார்க்க இன்னொரு நல்ல காரணம் கிடைத்துள்ளது...

ப்ரியா பவானி ஷங்கர்.. செய்தி வாசிப்பாளராக துவங்கி சீரியலில் நடிக்க ஆரம்பித்தவர் - இப்போது விஜய் டிவி காம்பியரிங் துவங்கி விட்டார்... அழகிய புது வரவு....!! வாங்கோ.. வாங்கோ.. !!!



CSK ...........விசில்???

சென்னை சூப்பர் கிங்க்ஸ் இரண்டு ஆண்டுகள் விளையாட முடியாது என்பது சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. முகநூலில் ஆண், பெண் என இரு பாலாரும் புலம்பி தள்ளியதை காண முடிந்தது

இவ்விஷயத்தில் எனக்கு சில கேள்விகள்:

மெய்யப்பன் தவறு செய்தார் எனில் அதற்கு அணியை தடை செய்து என்ன பயன்? தவறு செய்யாத வீரர்களுக்கும் சேர்த்தல்லவா தடை சென்று சேர்கிறது ?

தவறு செய்தவர்க்கு தண்டனை தான் என்ன? அவர் penalty எதுவும் கட்ட வேண்டாமா ? இரண்டு ஆண்டுகள் தடை மட்டும் போதுமா?

நிற்க. வீரர்கள் வேறு புது அணிக்கு ஆட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் - அப்படி நிகழ்ந்தால் - ஒவ்வொருவர் ஒவ்வொரு பக்கம் செல்ல கூடும்... சென்னை அணியின் பலம் சிதறி போய் விடும்... மேலும் அப்போது மேட்ச்கள் சென்னையில் நடக்காது ...சேப்பாக்கத்தில் மேட்ச் நடப்பது/ பார்ப்பது தானே நிஜ என்ஜாய் மெண்ட் !

சென்னையை சேர்ந்த வேறு யாரும் அணியை வாங்கி நடத்தினால் நன்றாய் இருக்கும்... அதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு தான் :(

எலெக்ட்ரிக் டிரைனில் சென்று BMW  கார் வாங்கியவர் 

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கனவு இருக்கும்; சென்னையை சேர்ந்த ஸ்ரீவத்சன் பாலாஜி என்ற மிடில் கிளாஸ் நபருக்கு BMW கார் வாங்கும் ஆசை ! 40 லட்சம் இதன் விலை.. !! இதற்காக பொறுமையாக 40 வருடம் சேமித்து இந்த கார் வாங்கியிருக்கிறார்.. 20 அடி அகலமே உள்ள இவரது தெருவில் இந்த கார் வந்தால் - எதிரில் வேறு கார் வர முடியாது !!

எலெக்ட்ரிக் ட்ரெயினில் சென்று இறங்கி கார் வாங்கிய - இவரது சுவாரஸ்ய கதையை கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து வாசியுங்கள்..



Thursday, July 16, 2015

ரோமியோ - ஜூலியட்- 100 days of love- டி மாண்டி காலனி - இனிமே இப்படித்தான்

கடந்த சில வாரங்களில் கண்ட படங்களின் சுருக்கமான விமர்சனம்.. அவ்வப்போது வானவில்லில் எழுதலாம் என வைத்திருந்து - வானவில் தாமதமாகவே - இவ்வடிவில் வருகிறது...

ரோமியோ - ஜூலியட்

ஜெயம் ரவி- பணக்காரர் என்று (தானாகவே) நம்ம்ம்ம்ப்பி காதலிக்கிறார் ஹன்ஷிகா. அவர் பணக்காரர் இல்லை என்று தெரிந்த அடுத்த நொடி " சீ போடா " என்று தூக்கி எறிகிறார். ஆனால் ஜெயம் ரவியோ - அப்படிப்பட்ட தங்கமான குணம் உள்ள பெண் தான் வேண்டும் என அடம் பிடித்து அவரையே எப்படி மணந்தார் என்பதே ரோமியோ ஜூலியட்.

படத்தின் பெரிய மைனஸ்- ஹன்ஷிகா பாத்திரம் தான். பணம் மட்டும் தான் முக்கியம் என என்னும் பெண்கள் எங்கேனும் சிலர் இருக்கலாம்... ஆனால் அத்தகையவரை ஹீரோயினாக ஏற்க தான் கஷ்டமாய் உள்ளது...



மற்றபடி.... ஜெயம் ரவி ஜிம் மாஸ்டராக கச்சிதமாக பொருந்துகிறார். டி ஆரு பாட்டும் அரக்கி பாட்டும் - பட்டையை கிளப்புது....

மேலே சொன்ன குறை இருந்தாலும் ஜாலியான பீல் குட் படமாக ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்...

டி மாண்டி காலனி

படம் குறித்து கொஞ்சம் விமர்சனங்கள் நல்ல விதமாய் வந்ததால் கண்டேன்... ஆனால் படம் என்னை கொஞ்சம் கூட கவரவில்லை...

ஹீரோயின் இல்லாமல் படமெடுத்த தைரியம்  - வித்யாசமான கதை + முடிவு ஆகியவற்றை மட்டுமே சற்று பாராட்டலாம்... ஆனால் படம் மொத்தத்தில் ஒரு ரசிக்கும்படியான அல்லது என்ஜாய் செய்யும் விதத்தில் அமைய வில்லை..

100 days of love

அதென்னவோ தெரியவில்லை... இந்த சினிமா ஹீரோக்களுக்கு - நிச்சயம் ஆன  பெண் என்றாலே ... ஒரு கிளுகிளுப்பு தான்.. நிச்சயத்துக்கும் திருமணத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு காதல் ஏற்பட்டு வருங்கால கணவரை கழட்டி விடும் கதைகள் தொன்று தொட்டு வருகின்றன... தமிழில் மட்டுமல்ல.. மலையாளத்திலும் அப்படி ஒரு படம் 100 days of love



ஆனாலும்... கதை சொல்லப்பட்ட விதத்தில் - திரைக்கதையில் நிச்சயம் ஒரு வித்யாசம் காட்டி முழுவதையும் நம்மை பார்க்க வைத்து விடுகிறார்கள்...

துல்கர் - நித்யா மேனன் ஜோடி - ஓகே கண்மணிக்கு முன்பே நடித்த படம் இது.. இருவரின் இயல்பான நடிப்பும் பார்க்க வைத்தது. மற்ற படி ரொம்ப சுமாரான படம் இது...

இனிமே இப்படித்தான்

சந்தானம் ரொம்ப நாள் கழித்து கொஞ்சம் பார்முக்கு  வந்திருக்கிறார்.அவரது காமெடி பிடிக்கும் நண்பர்கள் படத்தை நிச்சயம் ரசிக்கலாம்...



90 நாளில் கல்யாணம் ஆகணும் என ஜோதிடர் செல்ல, வீட்டில் ஒரு பெண் பார்க்கிறார்கள்... சந்தானம் ஒரு பெண் பார்க்கிறார்.. இறுதியில் யாரை மணந்தார் என்பதில் சுவாரஸ்ய டுவிஸ்ட் உள்ளது.. படத்தில் நான் அதிகம் ரசித்தது அந்த டுவிஸ்ட் தான்...

ஜாலியாக  சிரிக்க, நல்ல ஒரு டைம் பாஸ் மூவி. டிவியில் போடும்போது கண்டு களியுங்கள்...


Sunday, July 5, 2015

பொன்னியின் செல்வன் - நாடகம் - ஒரு அற்புத அனுபவம்....

மேஜிக் லாண்டர்ன் நிறுவனத்தின் பொன்னியின் செல்வன் நாடகம் கண்டு பிரமித்து போனோம்....

4 மணி நேர நாடகம்.. நேரம் போவதே தெரிய வில்லை... கதை தெரியாதோருக்கு - துவக்கத்தில் புரிந்து கொள்ளவும், முழுதும் தொடரவும் சற்று சிரமம் இருந்தாலும் - போக போக அனைவரும் கதையுடன் ஒன்றி விடும்படியான அமைப்பு

கதை 

சுந்தர சோழன் என்ற அரசர் உடல் நலமின்றி இருக்க - அவருக்கு பின் யாருக்கு முடி சூட்டுவது என்ற கேள்வியில் ஆரம்பிக்கிறது கதை. மூத்த மகன் - ஆதித்ய கரிகாலன் -  இளவரசன் பட்டம் சூட்டப்பட்டவன்.. இளையவன் அருள் மொழி (இவன் தான் பொன்னியின் செல்வன் ) ..



சிற்றசர்கள் குழு - உறவினர் மதுராந்தகனை அரசராக்க திட்டமிடுகிறது..

இன்னொரு பகைவர் கூட்டம் - சுந்தர சோழர் - அவரின் இரு பிள்ளைகள் - ஆதித்ய கரிகாலன்- அருள் மொழி மூவரையும் கொல்ல சதி திட்டம் தீட்டுகிறது..

சோழர் பரம்பரை என்ன ஆனது ... பகைவர்கள் திட்டம் நிறைவேறியதா என்பதே கதை..

திரைக்கதையில் ஆச்சரியங்கள்.. 

கல்கி - தனது நாவலில் பல்வேறு ஆச்சரியங்களை ஒளித்து வைத்துள்ளார்... வால் நட்சத்திரம் தெரிகிறது.. அரசர் குலத்துக்கு ஆபத்து என்று எதிர் பாராத - முக்கியமான ஒருவர் இறப்பது  ...

தனது தந்தைக்கு பிறந்தவள் என தெரியாமல் தங்கையை காதலிக்கும் அரசன் .. ( அந்த காலத்தில் இதை எழுத நிச்சயம் தைரியம் வேண்டும்.. )

இறுதியில் இறக்கும் அரசன் எப்படி இறந்தான் என்பதை கடைசி வரை சொல்லாமல் mystery ஆகவே முடிப்பது..

இப்படி சொல்லி கொண்டே போகலாம் ....

வந்திய தேவன் - குந்தவை- பழு வேட்டரையர் 

பொன்னியின் செல்வனில் நம்மை பெரிதும் கவர்வது- வெவ்வேறு குணாதிசயம் கொண்ட பாத்திரங்கள்..

அனைவருக்கும் பிடித்தமான -  குறும்புக்கார வந்திய தேவன் - வரும்போதே விசில் பறக்கிறது.. ஒவ்வொரு முக்கிய பாத்திரத்தையும் சினிமா பாணியில் - அருமையாய் அறிமுகம் செய்கிறார்கள்.



முதல் பாதியில்  வந்திய தேவன் அனைவரையும் கவர்கிறான் என்றால் கதை முடியும் போது பெரிய பழுவேட்டரையர் பாத்திரம் தான் மனதில் நிறைகிறது. அதுவும் அந்த பாத்திரத்தில் நடித்த வயதானவர் மிக, மிக  அற்புதமான நடிப்பு..

ஆதித்ய கரிகாலன் வரும் முதல் காட்சியும் - சிற்றரசர்களை நடுங்க வைக்கும் படி அவர் பேசும் தோரணையும் அசத்தல்.. இரண்டே காட்சியில் வந்தாலும் ஆதித்ய கரிகாலனை மறக்க முடியாது ..!


நந்தினி - கதை முழுக்க முழுக்க இவரை மையமாக கொண்டே நகர்கிறது.. இவருக்கு இரட்டை வேடங்கள் வேறு.. இவரும் பூங்குழலி ஆக நடித்தவரும் அழகு, நடிப்பு இரண்டிலுமே கவர்கிறார்கள்..

பொன்னியின் செல்வன் நாவல் + நாடகத்தில் - பொன்னியின்  செல்வன் வருவது.. மிக குறைந்த அளவே ... இருப்பினும் அரியணை மேல் ஆசை இல்லாதவன், ஏழைகளுக்கு எப்போதும் உதவுபவன் என அவர் பாத்திரம் உயர்வாக நிற்கிறது..

மேஜிக் லாண்டன் 

இந்த குழு  செய்யும் மிக முக்கிய விஷயம்.. அந்தந்த வயதுகேற்றவரை அந்தந்த பாத்திரத்தில் நடிக்க வைத்தது தான்.. மேடை நாடகத்தில் பல நேரம்.. 50 வயது ஆசாமிகள் ஹீரோ என்ற பேரில் காதல் செய்து கொண்டிருப்பர் .. இங்கோ அவரவர் வயதுக்கேற்ற பாத்திரத்தில் நடிப்பது ரசிக்க முடிகிறது..



நடிகர் குமாரவேல் தான் இந்நாவலை 4 மணி நேர நாடகமாக்கியது..

நாடகம் ஹவுஸ் புல் என்பது இருக்கட்டும்.. 4 மணி நேரம் ஆனாலும் - முடியும் வரை இருந்தது மட்டுமல்ல, கடைசியில் 5 நிமிடம் ஒவ்வொரு பாத்திரத்திலும் நடித்தவர்களை அறிமுகம் செய்யும் போது விடாமல் - கை தட்டினார்கள் சென்னை மக்கள்  !!

மேஜிக் லாண்டனின் பொன்னியின் செல்வன் .. இக்குழு இந்நாடகம் நடத்துவது இதுவே கடைசி முறை !! தயவு செய்து தவற விடாதீர்கள்... !!
Related Posts Plugin for WordPress, Blogger...