Sunday, October 9, 2016

முதல் மாரத்தான் அனுபவங்கள்..

முதலில் நல்ல விஷயம்: கடந்த 4 வாரங்களாக ஒரு நாள் விடாமல் நடந்து அல்லது ஓடி கொண்டிருக்கிறேன்.

முகநூலில் உள்ளத்தனைய உடல் என ஒரு குழுமம். உடற் பயிற்சி செயபவர்களுக்காக நடத்தப்படுகிறது. எந்த செயலையும் 21 நாள் செய்தால்- பின் தொடர்வது எளிது என்கிற அடிப்படையில் இது இயங்குகிறது.

தினம் தாங்கள் எவ்வளவு தூரம் நடந்தோம் அல்லது ஓடினோம் என பலரும்பகிர்வார்கள். அதில் இணைந்த பின் - தினமும் நடப்பது/ ஓடுவது அதனை அங்கு பகிர்வது என - இழந்த உடற் பயிற்சியை மீண்டும் பெற்றேன்.

கடந்த 28 நாளில் ஆவரேஜ் ஆக 10 கிலோ மீட்டர் என 280 கிலோ மீட்டராவாது நடந்திருப்பேன்...(75% நடை ; 25 % ஓட்டம் )



குழுமத்தில்  சில நண்பர்கள் மாரத்தான் கலந்து கொண்டு பகிர, நாமும் கலந்து கொண்டால் என்ன என தோன்றியது; விளைவு- முதன் முறை அலர்ட் தான் என்கிற தொண்டு நிறுவனம் நடத்திய 10 கிலோ மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டேன்

மாரத்தானில் கலந்து கொள்ளும்போது முதல் நாளே சென்று அவர்கள் தரும் பனியன் மற்றும் நமக்கான எண் உள்ள சீட்டை வாங்க வேண்டும். அப்படி சென்ற போது நிகழ்ச்சியை நடத்தும் அலர்ட் தான் நிறுவனம் சில தகவல்கள் கூறினார்கள் :

சாலை விபத்துகளில் அல்லது வீட்டில் திடீரென மயக்கம் ஆகுவோருக்கு முதல் உதவி தந்து - அவரை விரைவில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்க்க பயிற்சி தரும் தொண்டு நிறுவனம் தான் இது. கடந்த 10 வருடமாக இந்த சேவை செயகிறார்கள். மேலும் விப்ரோ சென்னை மாரத்தான் போன்ற பெரும்  மாரத்தானில் இவர்கள் குழு வாலன்டியர் ஆக உதவுகிறார்கள் !

பெங்களூரிலிருந்து வந்த கண்ணன் என்கிற மாரத்தான் வீரர் தனது அனுபவம் பகிர்ந்து கொண்டார்; சில மாதங்களுக்கு முன் விபத்தொன்றை நேரில் கண்ட அவர் - முதன் முறை ஒரு உயிரை காப்பாற்றி உள்ளார். பின் இந்த விழிப்புணர்வு பலருக்கும் வர வேண்டுமென பெங்களூரில் ஒவ்வொரு சனிக்கிழமையும் - வெவ்வேறு ஏரியாவில் 42 கிலோ மீட்டர் ஓடுகிறார். அச்சமயம் அனைவரிடமும் விபத்தில் சிக்கியோரை காப்பாற்ற சொல்லி துண்டு பிரசுரங்கள் தருகிறார். இதனை 42 வாரம் செய்ய இருப்பதாக கூறும் இவரது தற்போதைய வயது 42 !
*****
மராத்தான் நாளுக்கு வருவோம்.

எல்லா மாரத்தானும் அதிகாலை துவங்குகிறார்கள். அநேகமாய் ஞாயிறு தான் !

நேரத்தில் தூங்க சென்று, விடிகாலை எழுந்து - பழனியப்பனும் நானும் மாரத்தான் துவங்கிய ஜெயின் கல்லூரியை அடைந்தோம்.

 ஜூம்பா டான்ஸ் குழுவினர் சற்று வார்ம் அப் சொல்லி தந்தனர்.

Warm up dance !

நிறைய ஆட வைக்கிறார்கள் .. எனர்ஜி போயிடுமோ என சற்று பயம்.. (நல்ல வேளை அப்படி நடக்கலை !)

5.45 க்கு கொடியசைத்து ஓட்டம் துவங்கியது. பலருடன் சேர்ந்து ஓடுவதே செம வித்தியாச அனுபவம். வழியெங்கும் நின்று கை தட்டி ஊக்குவிக்கிறார்கள். தண்ணீர் - பிஸ்கட்- சாக்கலேட் போன்றவை தருகிறார்கள். நாங்கள் ஓடியது OM R சாலையில். காலை நேரம் டிராபிக் குறைவு.. ஆனால் சிற்சில பஸ்கள் மற்றும் கார்கள் சென்று கொண்டிருந்தன. எனவே போலீஸ் வண்டிகள் ஆங்காங்கு நின்று ஓடுவோர் சென்ற பின் வாகனங்கள் செல்ல உதவி கொண்டிருந்தனர். அந்த போலீசில் சிலரும் கை தட்டி " நல்லா ஒடுங்க" என ஊக்குவித்தது நெகிழ்வாக இருந்தது.

எப்பவும் அரை கிலோ மீட்டர் அளவு ஓடுவேன். பின் 200 மீட்டர் நடை பின் மீண்டும் ஓட்டம் என்று தான் செல்வேன். மாராத்தானில் பலரும் ஓடும்போது இடை இடையே நடந்தாலும் - நடந்த நேரம் குறைவு.. ஓடிய நேரமே அதிகம்..

ஓட துவங்கும் முன் - இடமிருந்து- நான், பழனியப்பன், திருலோக் 

10 கிலோ மீட்டர் 70 நிமிடத்தில் ஓட நினைத்தேன். முதல் 2-3 கிலோ மீட்டர் - ஒவ்வொன்றும் ஆறரை நிமிடத்தில் ஓடி கொண்டிருந்தேன். பின் ஒரு கிலோ மீட்டருக்கு ஏழு நிமிடம்  ஆனது. கடைசி 2 கிலோ மீட்டர் இருக்கும் போது - 70 நிமிடத்துக்கு 14 நிமிடம் இருந்தது. சற்று தம் கட்டி ஓடி சரியே 70 நிமிடத்தில் முடித்தேன்.

முதன் முறை ஓடுவோர் நேரத்தை கண்டு கொள்ள கூடாது; முடிப்பது தான் முக்கியம். நான் ஓரளவு ஓடியவன் என்பதால் - ஆர்வ கோளாறில் நிமிடங்களும் டார்கெட்டில் சேர்த்து கொண்டேன்.

முடித்தபின் ஓரிரு நிமிடம் சிரமமாக இருந்தது; ஆனால் இரண்டே நிமிடத்தில் சரியாகி விட்டது.

ஓடுவதற்கு ரொம்ப நேரம் முன் நன்கு தண்ணீர் குடிக்கவேண்டும். இப்படி குறைந்த அளவு தூரம் ஓடும்போது நடுவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது நல்லது; நடுவில் நான் தண்ணீர் குடித்து அதுவே - கொஞ்சம் சிரமமாய் இருந்தது. நண்பர் பழனிக்கு துவங்கும் முன் குடித்த தண்ணீர் வயிறை சற்று சிரமப்படுத்தியதாம்.

அனைத்தும் முடிந்ததும் புகைப்படம் எடுத்து கொண்டோம்.. இங்கு மட்டும் மக்களிடம் செம போட்டா போட்டி.. !



அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. ஏராள கல்லூரி மாணவிகள் 5 கிலோ மீட்டர் ஓடிவிட்டு வந்திருப்பதை காண முடிந்தது

முடித்து விட்டு கிளம்பு போது பயங்கர சந்தோசம்.. நிம்மதி. எதையோ சாதித்த உணர்வு..

இந்த மாரத்தானுக்கு பிறகு - டிசம்பரில் வரும் விப்ரோ மாரத்தானில் 10 கிலோ மீட்டாரா, 21  கிலோ மீட்டாரா என முடிவு செய்ய நினைத்திருந்தோம்.. இப்போதைக்கு கொஞ்ச நாள் 10 கிலோ மீட்டார் ஓடலாம். 21 கிலோ மீட்டர் பின்னர் பார்க்கலாம் என பழனியும் நானும் முடிவு செய்தோம்.

உள்ளதனைய உடல் குழுமத்திற்கும் உடன் வந்த பழனி மற்றும் திரிலோக் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றி.. உங்களின் சப்போர்ட் இல்லாவிடில் நிச்சயம் இது சாத்தியம் ஆகியிருக்காது !
அடுத்து டிசம்பரில் - சென்னையின் மிக பெரிய விப்ரோ மாரத்தான்.. ! அதிலே சந்திக்கலாம்..   !
***********
தொடர்புடைய பதிவுகள்

உடல் எடை குறைப்பு: உணவாலா? உடற் பயிற்சியாலா: ஒரு நேரடி அனுபவம்

சென்னையின் மாபெரும் - விப்ரோ மாரத்தான்.. சில பாசிட்டிவ் & நெகட்டிவ்

பாடகர் நரேஷ் அய்யருடன் ஓடிய மாரத்தான் + மினி பேட்டி-படங்கள்


2 comments:

  1. வாழ்த்துக்கள்... :) 21,42 என முன்னேறி லடாக் மராத்தானிலும் கலந்து கொள்ள வாழ்த்துக்கள்.. நானும் முகநூலில் சிலர் மாராத்தான் ஓடுவதை பார்த்து ஆசைப்பட்டு ஒரு மாதம் ஓடிவிட்டு பின்னர் விட்டுவிட்டேன். இப்போது உங்கள் பதிவை பார்க்கும் பொழுது மீண்டும் ஓட ஆசை எழுகிறது. நாளையிலிருந்து ஓட வேண்டும்....

    உங்களின் பதிவுகளை கடந்த சில மாதங்களாக படித்து வருகிறேன், பயனுள்ள வகையில் இருக்கிறது. உயர்கல்வியில் என்ன படிக்கலாம் என ஆலோசனை அளித்த உங்கள் பதிவுகளை நண்பர்கள் பலருடன் பகிர்ந்து கொண்டேன். சுற்றுலா தொடர்பான தகவல்களும் அருமை. அவ்வப்போது பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்த நினைத்தாலும் செய்ததில்லை. இன்றுதான் முதல் பின்னூட்டம்... தொடர்ந்து எழுதுங்கள்.... வாழ்த்துக்கள்.... :)

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் மோகன் சார். இனியெல்லாம் நலமே

    Best of luck for future marathons also

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...